சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் இராஜாங்கச் செயலராக கிரேஸ் ஆசீர்வாதம் நியமனம்
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் புதிதாக, இராஜாங்கச் செயலர் என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 17ஆம் நாள் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தப் பதவியை உருவாக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் முதலாவது இராஜாங்கச் செயலராக கிரேஸ் ஆசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்றுமுன்தினம், கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இவருக்கான நியமனக் கடிதத்தை, சிறிலங்காவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க வழங்கினார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான, கிரேஸ் ஆசீர்வாதம், நெதர்லாந்து, நேபாளம் ஆகிய நாடுகளுக்கான சிறிலங்கா தூதுவராகப் பணியாற்றியவர்.
ஜேர்மனி, பாகிஸ்தான் நாடுகளில் சிறிலங்கா தூதரகத்திலும் பணியாற்றியுள்ளார். அத்துடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார்.
நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள இரசாயன ஆயுதங்களைத் தடை செய்வதற்கான அமைப்பின், பிரதிப்பணிப்பாளராகவும் கிரேஸ் அசீர்வாதம் நான்கு ஆண்டுகள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.