ரொஹிங்யா அகதிகளை அச்சுறுத்திய அக்மீமன தயாரத்ன தேரருக்கு விளக்கமறியல்
கல்கிசையில் மியான்மாரின் ரொஹிங்யா அகதிகள் தங்கியிருந்த வீட்டுக்குள் நுழைந்து அச்சுறுத்தல் விடுத்த சிங்கள ராவய அமைப்பைச் சேர்ந்த அக்மீமன தயாரத்ன தேரரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்கிசையில் உள்ள வீடு ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த ரொஹிங்யா அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரி, கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் செய்த சிங்கள ராவய அமைப்பைச் சேர்ந்தவர்கள், அந்த வீட்டுக்குள் நுழைந்து அகதிகளை தாக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து, அகதிகள் காவல்துறையினரால் அங்கிருந்து மீட்கப்பட்டு, பூசா தடுப்பு முகாமுக்கு அனுப்ப்பபட்டனர்.
இந்த நிலையில், ரொஹிங்யா அகதிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தவர்களை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். இதுவரையில் 7 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நேற்றுக்காலை விசாரணைக்கு அழைக்கப்பட்ட சிங்கள ராவய அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அக்மீமன தயாரத்ன தேரர், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
இதையடுத்து அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.