போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த கொள்கையை வகுக்கவுள்ளதாம் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு
குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட சிறிலங்கா படையினர் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வியில், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போகச் செய்யப்பட்டமை உள்ளிட்ட குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
அதேவேளை, ஆயுதப் படையினர் துன்புறுத்தப்படுவதில் இருந்து பாதுகாக்கப்படுவர் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, எந்தவொரு சூழ்நிலையிலும் சிறிலங்கா படையினர் தண்டிக்கப்படமாட்டார்கள் என்று சிறிலங்கா அதிபர் கூறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
“குற்றங்களில் ஈடுபட்டவர்கள், உயர்நிலை அல்லது கீழ்நிலை அதிகாரியாக இருந்தாலும் சரி, சட்டத்தை எதிர்கொள்ள வேண்டும் என்றே அவர் கூறியிருக்கிறார். லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட வழக்குகள், சரியான முறையில், சட்ட ரீதியாக, இடம்பெறுகின்றன.
தமது ஆணையை விட்டு விலகிச் செயற்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டால், சிறிலங்கா படையினருக்கு விலக்கு அளிக்கப்படாது.
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கொள்கை ஒன்றை வகுக்கவுள்ளது. அது வேறுபட்ட செயல்முறையாக இருக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.