வடமாகாண அமைச்சர்களாக அனந்தி, சர்வேஸ்வரன் பதவியேற்பு
வடக்கு மாகாணசபையின் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு இன்று காலை வடக்கு மாகாண ஆளுனர் செயலகத்தில், ஆளுனர் ரெஜினோல்ட் குரே, முன்னிலையில் இடம்பெற்றது.
இன்று காலை 10 மணியளவில் நடந்த இந்த நிகழ்வில், வடக்கு மாகாண கல்வி, விளையாட்டுத்துறை, மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சராக கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் பதவியேற்றார்.
பெண்கள் விவகார, சமூக சேவைகள், புனர்வாழ்வு, தொழில்துறை ஊக்குவிப்பு அமைச்சராக அனந்தி சசிதரன் பதவியேற்றுக் கொண்டார்.
அதேவேளை, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சராகப் பதவியேற்றார்.
3 மாதங்களுக்கு தற்காலிகமாக- கல்வி அமைச்சராக சர்வேஸ்வரனும், பெண்கள் விவகார அமைச்சராக அனந்தி சசிதரனும் நியமிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.