விபத்துக்குள்ளான உலங்குவானூர்தியை சேவையில் இருந்து நீக்குகிறது சிறிலங்கா விமானப்படை
வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, தொழில்நுட்பக் கோளாறினால் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட போது பலத்த சேதமடைந்த எம்.ஐ.17 உலங்குவானூர்தி சேவையில் இருந்து முற்றாக நீக்கப்படும் என்று சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.
காலி மாவட்டம் பத்தேகமவில் வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சிறிலங்கா விமானப்படையின் எம்.ஐ-17 உலங்குவானூர்தி ஒன்று தொழில்நுட்பக்கோளாறினால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
வீடு மற்றும் மரங்களுக்கிடையில் தரையிறக்கப்பட்டதால், அது பலத்த சேதமடைந்ததுடன் வெள்ளத்திலும் சிக்கியது.
வெள்ளம் வடிந்த பின்னர் அந்த உலங்குவானூர்தி சிறிலங்கா விமானப்படையினரால் பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, கொக்கல விமானப்படைத் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பலத்த சேதமடைந்துள்ள இந்த உலங்குவானூர்தியை தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுத்துவதில்லை என்று சிறிலங்கா விமானப்படை முடிவு செய்துள்ளது.
பொதுவாக தரையில் அல்லது நீரில் மோதி விழுந்த உலங்குவானூர்திகளை தாம் பயன்படுத்துவதில்லை என்று சிறிலங்கா விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதால், எந்தக் கருத்தையும் வெளியிட முடியாது என்று சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.