சிறிலங்கா படையினரை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் – ஐ.நா
ஐ.நா அமைதிப்படைக்கு தமது படையினரை அனுப்பும் உறுப்பு நாடுகள், ஐ.நா அமைதிப்படைக்கு தமது வீரர்களை அனுப்பும் போது, அவர்கள் எந்த பாலியல் துஷ்பிரயோகத்திலும் தொடர்புபடவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பாலியல் துஷ்பிரயோகங்களில் தொடர்புபடவில்லை என்பதை ஒவ்வொருவரையும் ஆய்வு செய்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், சிறிலங்காவிடமும் இதனையே ஐ.நா எதிர்பார்க்கிறது என்றும் அவர் கூறினார்.
ஹெய்டியில் சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டு சிறிலங்கா படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், ஐ.நா அமைதிகாப்புப் பணியில் சிறிலங்கா படையினரை தொடர்ந்து ஈடுபடுத்துவது ஏன் என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர், அங்கு சிறிலங்கா படையினர் நீண்டகாலத்துக்கு நிறுத்தப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் பரந்துபட்ட பொறுப்புக்கூறலை உறுப்பு நாடுகளிடம் வலியுறுத்திய போதிலும், ஒருபோதும் உறுப்பு நாடுகள் அதுபற்றிய தகவல்களை ஐ.நாவுக்கு வழங்கியதில்லை என்றும் ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.