ஜெனிவாவில் 2 ஆண்டுகள் காலஅவகாசம் கோரவுள்ளதை உறுதிப்படுத்தியது சிறிலங்கா
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கோரப் போவதாக, சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜெனிவா சென்றுள்ள சிறிலங்கா அரசின் பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றுள்ள நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்பு செயலகத்தின் செயலர் மனோ தித்தவெல பிபிசியிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிடம் மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசத்தைப் பெற முடியும் என்று சிறிலங்கா நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிறிலங்காவுக்கு காலஅவகாசம் அளிக்கும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த அமர்வில், புதிய தீர்மானம் ஒன்று அமெரிக்கா, பிரித்தானியா, சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளின் இணை அனுசரணையுடன் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, ஜெனிவாவில் நேற்று நடந்த பக்க அமர்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட மனோ தித்தவெல, காணிகள் விடுவிப்பை துரித்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.