வில்பத்து தேசிய பூங்காவின் எல்லைகளை விரிவுபடுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு
வில்பத்து தேசிய பூங்காவின் எல்லைகளை விரிவுபடுத்தி, வனவிலங்குகள் வலயமாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனம் செய்யுமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், வில்பத்து தேசிய பூங்காவைச் சுற்றியுள்ள – வனவிலங்குகள் திணைக்களத்தின் கீழ் இல்லாத காடுகளையும், இந்த வனவிலங்குகள் வலயத்தின் கீழ் கொண்டு வருமாறும் சிறிலங்கா அதிபர் பணித்துள்ளார்.
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சுக்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் நேற்று நடத்திய சிறப்புக் கூட்டத்திலேயே சிறிலங்கா அதிபர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அத்துடன் வில்பத்து உள்ளிட்ட வனப்பகுதிகளை பிந்திய நவீன முறைகளைப் பயன்படுத்தி வானில் இருந்து கண்காணிக்கும் பொறிமுறைகளை உருவாக்குமாறும், சிறிலங்கா அதிபர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், காடுகளை அழிப்பவர்கள் மீது அவர்கள் எந்த நிலையில் இருப்பவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார்