அனைத்துலக ஆலோசனைக்குழுவுக்கு ஜப்பானிய நிபுணர் நியமனம்
வடக்கு, கிழக்கில் போர் இடம்பெற்ற காலத்தில் காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் சிறிலங்கா அதிபர் ஆணைக்குழுவுக்கு ஜப்பானிய நிபுணர் ஒருவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிபர் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, பிரித்தானியாவைச் சேர்ந்த சேர் டெஸ்மன்ட் டி சில்வா தலைமையில் அனைத்துலக நிபுணர் குழுவொன்று கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில், சேர் டெஸ்மன்ட் டி சில்வாவுடன், பிரித்தானியாவைச் சேர்ந்த சேர். ஜெப்ரி நைஸ், அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் டேவிட் கிரேன், இந்தியாவைச் சேர்ந்த அவ்டாஸ் கௌஷல், பாகிஸ்தானைச் சேர்ந்த அஹ்மர் பிலால் சூபி ஆகிய ஐந்து பேர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த அனைத்துலக ஆலோசனைக் குழுவிலேயே ஆறாவது உறுப்பினரான ஜப்பானிய நிபுணரான மோட்டு நுகிசி (Motoo Noguchi) இணைக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கடந்தமாதம் இந்த நியமனத்தைச் செய்துள்ளார்.
மோட்டு நுகுசி, கம்போடியாவில் இடம் பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட அனைத்துலக நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாவார்.
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் செயற்படும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதியத்தின் பணிப்பாளர் சபையின் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.