இந்தியாவுடனான உடன்பாட்டை எதிர்ப்பவர்கள் துரோகிகள் – என்கிறார் ரணில்
இந்தியாவுடன் கைச்சாத்திடத் திட்டமிடப்பட்டுள்ள, பொருளாதார தொழில்நுட்ப உடன்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள், துரோகிகள் என்றே அடையாளப்படுத்தப்படுவர் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையில் நேற்றுமுன்தினம் ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“இந்தியாவுடன் செய்து கொள்ளப்படும் , பொருளாதார தொழில்நுட்ப உடன்பாடு, நாட்டின் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் துரோகிகள். ஏனென்றால், அவர்கள் எமது இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை தேடக்கூடாது என்று நினைக்கிறார்கள்.
இந்தியாவுடன் கைச்சாத்திடுவதற்காக முன்வைக்கப்பட்ட விரிவான பொருளாதார கூட்டு உடன்பாட்டுக்குள் (சீபா) பொருட்கள் மற்றும் சேவைகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
ஆனால், இந்த உடன்பாட்டில், தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளன.
வேலைவாய்ப்பை உருவாக்க நாம் பாரிய சந்தைகளுக்குள் நுழைய வேண்டும். வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு எனது அரசாங்கத்துக்கு, ஆணை வழங்கப்பட்டுள்ளது.
,இந்தியாவுடன் மட்டுமன்றி சீனா, ஜப்பான், சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளுடனும் சுதந்திர வர்த்தக உடன்பாடுகளை செய்துகொள்ளவுள்ளோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.