இன்று மைத்திரி, சம்பந்தனை சந்திக்கிறார் சுஸ்மா
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
நேற்று மதியம் கொழும்பு வந்த சுஸ்மா சுவராஜ், பல்வேறு நிகழ்வுகள், சந்திப்புகள், பேச்சுக்களில் பங்கேற்றிருந்தார்.
நேற்றுமாலை மலையக மக்களின் வாழ்க்கை நிலையை எடுத்துக்காட்டும் வகையில் தயாரிக்கப்பட்ட Echoing Hills என்ற 30 நிமிட ஆவணப்படத்தை, சிறிலங்கா அதிபருடன் இணைந்து, இந்திய வெளிவிகார அமைச்சர் வெளியிட்டார். இதையடுத்து, அவர்கள் அந்த ஆவணப்படத்தைப் பார்வையிட்டனர்.
நேற்றிரவு சுஸ்மா சுவராஜ் மற்றும், இந்திய அதிகாரிகளுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இராப்போசன விருந்து அளித்தார்.
இன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
இதன் போது, அரசியலமைப்பு மாற்றத்தில் தமிழர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தப்பட வேண்டியது பற்றிய இந்தியாவின் கரிசனையை வெளிப்படுத்துவார் என்றும், மீனவர்கள் பிரச்சினை குறித்தும் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனையும், அவர் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
இதையடுத்து, இன்று பிற்பகல் சுஸ்மா சுவராஜ் புதுடெல்லி புறப்பட்டுச் செல்வார்.