மடுவில் கண்ணிவெடி அகற்றினார் மங்கள – ஒட்டாவா உடன்பாட்டில் கையெழுத்திட இணக்கம்
போர் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் அனைத்துலக உடன்பாட்டில் கையெழுத்திட சிறிலங்கா அரசாங்கம் தயாராக இருப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உறுதியளித்துள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று, கனேடியத் தூதுவர் ஷெல்லி வைற்றிங்குடன் இணைந்து மன்னார் மடுப்பகுதிக்குச் சென்று கண்ணிவெடிகள் அகற்றப்படும் பகுதிகளைப் பார்வையிட்டிருந்தார்.
இதன்போதே, 1997ஆம் ஆண்டு கனடாவின் முயற்சியில் உருவாக்கப்பட்ட கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் ஒட்டாவா பிரகடனத்தில் கையெழுத்திட சிறிலங்கா அரசாங்கம் தயாராக இருப்பதாக மங்கள சமரவீர உறுதியளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஆண்டு இந்த உடன்பாட்டில் கையெழுத்திடுவது குறித்து சிறிலங்கா அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்ணிவெடிகளை பயன்படுத்துவது, களஞ்சியப்படுத்தி வைப்பது, தயாரிப்பது, பரிமாற்றம் செய்வது உள்ளிட்டவற்றைத் தடை செய்வதற்கு வழிவகுக்கிறது ஒட்டாவா உடன்பாடு.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், சிறிலங்கா படையினர் பெருமளவில் கண்ணிவெடிகளைப் பயன்படுத்தி வந்ததால், இந்த உடன்பாட்டில் கையெழுத்திட சிறிலங்கா அரசாங்கம் மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.