கொமன்வெல்த் தலைமையை ஒப்படைக்க மோல்டா செல்கிறார் மைத்திரி
கொமன்வெல்த் தலைவர்களின் 24ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை மோல்டாவுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
தெற்கு ஐரோப்பாவில் உள்ள சின்னஞ்சிறிய தீவு நாடான மோல்டாவில், 24ஆவது கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாடு நாளை ஆரம்பமாகி, 29ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்க கொமன்வெல்த் அமைப்பின் தற்போதைய தலைவரான சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று, மோல்டா தலைநகர் வலெட்டாவைச் சென்றடைவார்.
உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணியளவில் எமிரேட்ஸ் விமானம் மூலம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, வலெட்டா விமான நிலையத்தைச் சென்றடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை ஆரம்பமாகி 29ஆம் நாள் வரை நடக்கவுள்ள, இந்த உச்சி மாநாட்டில், கொமன்வெல்த் அமைப்பின் தலைமைப் பதவியை, மோல்டா பிரதமர் ஜோசப் மஸ்கட்டிடம் அதிகாரபூர்வமாக கையளிப்பார்.
இந்த மாநாட்டில் உலகத் தலைவர்கள் பலரும் பங்கேற்பதால், மோல்டாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கொமன்வெல்த் உச்சி மாநாட்டில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோர் ஏற்கனவே மோல்டா சென்றுள்ளனர்.