சிறிலங்கா பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டார் சமந்தா பவர்
மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்திருந்த ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர், இன்று அதிகாலை தனது பயணத்தை முடித்துக் கொண்டு சிறிலங்காவில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
கடந்த 21ஆம் நாள் சிறிலங்கா வந்த சமந்தா பவர், யாழ்ப்பாணம் சென்று பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டதுடன், சிறிலங்கா அரசாங்கத் தரப்பு மற்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளுடனும் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
சிறிலங்கா பிரதமரின் இராப்போசன விருந்துடன் மூன்று நாள் சிறிலங்கா பயணத்தை நேற்றிரவு, முடித்துக் கொண்ட சமந்தா பவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா அவரை, விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தார்.
சிறிலங்காவில் வியத்தகு மாற்றம் நிகழ்ந்திருப்பதாக உற்சாகத்துடன் கூறிய சமந்தா பவர், அமெரிக்கா எமது பக்கம் நிற்கும் என்று குறிப்பிட்டதாகவும் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், கடந்த மே மாதத்துக்குப் பின்னர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட ஒபாமாவின் அமைச்சரவையில் உள்ள இரண்டாவது அதிகாரி சமந்தா பவர் என்பது குறிப்பிடத்தக்கது.