புதுடெல்லியில் ஜெய்சங்கருடன் ரில்வின் சில்வா சந்திப்பு
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, புதுடெல்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
நேற்று நடந்த இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல், அபிவிருத்தி வாய்ப்புகள், மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான சமூக நல முயற்சிகளை மேம்படுத்துதல் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது, சிறிலங்காவுக்கான இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அண்மைய பொருளாதார நெருக்கடியின் போதும், பேரிடரின் பின்னரும் வழங்கப்பட்ட உதவிகளை நினைவுபடுத்தினார்.
சிறிலங்காவின் நம்பகமான, உண்மையான பங்காளியாக இந்தியா தொடர்ந்து இருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
அதேவேளை, இந்த சந்திப்பு சுமுகமானதாக இருந்தது என்றும், சவாலான காலங்களில் சிறிலங்காவுக்கு ஆதரவாக நின்ற இந்தியா, எதிர்காலத்திலும் அதைத் தொடரும் என்றும் ஜெய்சங்கர் எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளார்.


