அவசரகாலச் சட்ட நீடிப்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கரிசனை புறக்கணிப்பு
அவசரகாலச் சட்ட பிரகடனத்தில் திருத்தம் செய்யுமாறு தாங்கள் முன்மொழிந்த விடயங்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்று, சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அண்மையில் அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசிதழ் அறிவிப்பில், முன்னர் வெளியிடப்பட்ட அவசரகாலச் சட்டவிதிகளில் எந்த மாற்றத்தையும் காணவில்லை என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரும், உறுப்பினருமான, சட்டவாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவ, தெரிவித்துள்ளார்.
அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரகடனம், அதே விதிமுறைகளுடன் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசிய சேவைகளைத் தொடர வேண்டியதன் அடிப்படையில், அவசரகாலச் சட்டப் பிரகடனம் நியாயப்படுத்தப்பட்டிருந்தாலும்,சில குறிப்பிட்ட விதிகள் அதற்குப் பொருத்தமற்றவை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினைகள் குறித்துத்தான், நாங்கள் சிறிலங்கா அதிபருக்கு கடிதம் எழுதினோம், ஆனாலும், அவசரகாலச் சட்ட நீடிக்கப்படும்போது, எங்கள் பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.என்றும் நிமல் ஜி. புஞ்சிஹேவமேலும் தெரிவித்துள்ளார்.
அவசரகாலச் சட்டத்தை நீடித்து சிறிலங்கா அதிபரின் உத்தரவின் பேரில் அவரது செயலாளரினால் கடந்த டிசெம்பர் 29ஆம் திகதி அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரகடனம், ஜனவரி 6 ஆம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
