மேலும்

நிசாம் காரியப்பர் மீது சட்டம் பாயும் – விஜித ஹேரத் எச்சரிக்கை

உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் அமர்வின் போது கூறப்படாத கருத்துக்கள் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதாகக் கூறப்படும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் எச்சரித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில், உரையாற்றிய அவர்,

“உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் எந்த உறுப்பினருக்கும் உள் விவாதங்களை ஊடகங்களுக்கு வெளியிட நெறிமுறை உரிமை இல்லை.

சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவது நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் தேசிய நலன்களைப் பாதிக்கும்.

இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தவறான தகவல்களைப் பரப்பியவர்கள் மற்றும் ஊடகங்களுக்கு அதை வழங்கியவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் இந்தியாவின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்டதாகவோ அல்லது மூளையாக செயற்பட்டவர் இந்தியாவுடன் தொடர்புடையவர் என்றோ செயலாளர் ரவி செனவிரத்ன எந்த நேரத்திலும் கூறவில்லை.

இந்த அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்ட வலுவான இராஜதந்திர உறவுகளை சேதப்படுத்தும் நோக்கில் கட்டப்பட்ட முற்றிலும் தவறான கதை இது.

இந்தியாவைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை – எந்த நாட்டையும் குறிப்பிடவில்லை.

இருப்பினும், குழுவின் உறுப்பினர் ஒருவரால் முற்றிலும் தவறான மற்றும் பொறுப்பற்ற செய்தி அறிக்கை உருவாக்கப்பட்டது.

இது ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை அமைக்கிறது. நாங்கள் அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுப்போம்.

குழு விவாதங்களை ஊடகங்களுக்கு வெளியிட உறுப்பினர்களுக்கு எந்த நெறிமுறை உரிமையும் இல்லை.

நாங்கள் வகிக்கும் பொறுப்பைப் பற்றிய உண்மையான புரிதல் இருந்தால், அந்த இரகசியத்தன்மை மதிக்கப்பட வேண்டும்.

இந்த வகையான தகவல்களை ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்வது நெறிமுறையற்றது மற்றும் சட்டவிரோதமானது,” என்றும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *