49 ஆவது பிரதம நீதியரசராக பதவியேற்றார் பிரீதி பத்மன் சூரசேன
சிறிலங்காவின் 49வது பிரதம நீதியரசராக பிரீதி பத்மன் சூரசேன, அதிபர் அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் நேற்றுப் பதவியேற்றுள்ளார்.
48ஆவது பிரதம நீதியரசராக இருந்த முர்து பெர்னான்டோ ஓய்வு பெற்றதை அடுத்து அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
1989 ஆம் ஆண்டு சட்டத்தரணிகள் சங்கத்தில் இணைந்து கொண்ட சூரசேன, பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து அரசு சட்டவாளராக பணியாற்றினார்.
2007 ஆம் ஆண்டு மேல்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், 2016 ஆம் ஆண்டு, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டு, 2018 ஆம் ஆண்டு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகவும், 2019 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதியரசராகவும் நியமிக்கப்பட்டார்.