மேலும்

அனுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு

உள்நாட்டுப் போரின்போது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், சிறிலங்காவுக்கு ஆயுதங்களை விற்க மறுத்தபோது,  ஆயுதங்களை வழங்கிய முக்கிய நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று.

ரஷ்யா ஒருபோதும் விடுதலைப் புலிகள் அல்லது, புலிகள் சார்பான புலம்பெயர்ந்தோர் சார்பாக நிற்கவில்லை.

வடக்கில் உள்நாட்டுப் போரின்போது மனித உரிமைகளை மீறியதற்காக, சிறிலங்காவுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தீர்மானங்களை நிறைவேற்றியபோது, சிறிலங்காவுக்கு ஆதரவாக இணைந்த நாடுகளில் ரஷ்யாவும் ஒன்றாகும்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது, அந்தத் தீர்மானத்தைத் தோற்கடிப்பதற்காக, ரஷ்யா சிறப்பாகச் செயற்பட்டது.

ஆனால் அந்த தீர்மானங்களைத் தோற்கடிக்க முடியவில்லை.

அந்த நேரத்தில், சிறிலங்காவுக்கு எதிரான ஜெனிவா தீர்மானத்தை தோற்கடிக்க வேண்டும் என்ற கருத்து ஜேவிபியிடம் இருந்தது.

தற்போதைய ஜேவிபி அமைச்சர் லால்காந்த 2013ஆம் ஆண்டில்,  ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டார்.

“ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் குறித்து சிறிலங்கா அரசாங்கத்துக்கு பாடம் நடத்த தேவையில்லை. ஒரு கட்சி என்ற ரீதியில், இதை நாங்கள் நிராகரிக்கிறோம். ஏகாதிபத்தியவாதிகளின் இந்த திட்டங்களை நிராகரிக்குமாறு, சிறிலங்கா மக்களை வலியுறுத்துகிறோம்…”

இவை லால்காந்தவின் வார்த்தைகள். லால்காந்தவின் ஜேவிபியினது இந்தக் கொள்கைக்கு ரஷ்யாவும் உதவியது.

இருப்பினும், கோவிட் தொற்றுநோய் காலத்தில், சிறிலங்காவின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியின் விளிம்பில் இருந்தபோது, சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வந்தனர்.

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளால், சிறிலங்காவின் சுற்றுலாத்துறை காப்பாற்றப்பட்டது.

சிறிலங்கா வங்குரோத்தான போது, சிறிலங்காவின் சுற்றுலாத்துறை வீழ்ச்சிகண்டது. அந்த நேரத்திலும் சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வந்தனர்.

இன்று, ரஷ்யா சுற்றுலாப் பயணிகள் யாரும் வராமல், இவ்வளவு சுற்றுலாப் பயணிகள் வந்ததாகக் காட்ட அரசாங்கம் புள்ளிவிபரங்களை உருவாக்கி வருகிறது.

அம்பாந்தோட்டையில் உள்ள வெறிச்சோடிய மத்தள விமான நிலையத்தில், ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுடன் விமானங்கள் தரையிறங்கின.

இந்த விமான நிலையத்தைக் கட்டுப்படுத்த ரணிலின் அரசாங்கத்திடம், ஒரு இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனம் ஒரு திட்டத்தை சமர்ப்பித்தது.

ரணிலின் அரசாங்கம் இந்த திட்டத்தை அங்கீகரித்தது.

இந்த ரஷ்ய நிறுவனத்தின் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளதால், அந்த திட்டத்தை கைவிடுமாறு சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அழுத்தம் கொடுத்தார்.

இதன் பின்னர் நாம் எடுக்கும் முடிவுகளில் செல்வாக்கு செலுத்த எந்தவொரு வெளிநாட்டு நாட்டுக்கும் உரிமை இல்லை என்று, விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த நிமல் சிறிபால டி சில்வா கூறியிருந்தார்.

ரணில் தோற்கடிக்கப்பட்டு, அனுர ஆட்சிக்கு வந்தார்.

அமெரிக்காவின் அழுத்தத்தின் கீழ் மத்தளவை ரஷ்ய-இந்திய நிறுவனத்திற்கு வழங்குவதை அனுராவின் அரசாங்கம் கைவிட்டது.

(நன்றி- the Daily morning)

அனுர  சிறிலங்கா அதிபரானவுடன்,  ரஷ்ய தூதுவர் அவரைச் சந்தித்து, ரஷ்யாவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, ரஷ்ய அதிபர் புடினின் சிறப்பு அழைப்பை கொடுத்தார்.

ஆனால் அனுர உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

அண்மையில், பண்டாரநாயக்க சர்வதேச உறவுகளுக்கான மாநாட்டு மண்டபத்தில்,  நடைபெற்ற வட்டமேசை கலந்துரையாடலின் போது, அனுரகுமார திசாநாயக்க பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளாததற்கு மொழிபெயர்ப்பாளரின் தவறு காரணமா எனத் தனக்குத் தெரியாது என்று ரஷ்ய தூதுவர் கிண்டலாகக் கூறினார்.

அண்மையில் ரஷ்யா, சிறிலங்காவுக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்தியது. இப்போது மத்தள வெறிச்சோடிக் காணப்படுகிறது.

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுடன் எந்த விமானங்களும் வரவில்லை.

போரின் போது ரஷ்யாவைப் போலவே சிறிலங்காவுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடு ஈரான்.

கலாநிதி தயான் ஜயதிலகவின் கூற்றுப்படி, சிறிலங்கா உதவியற்ற நிலையில் இருந்தபோது, சிறிலங்காவை நெருங்கிய நண்பனாக கருதி, சிறிலங்காவுக்கு நவீன ஆயுதங்களை ஈரான் வழங்கியது.

அமெரிக்கா ஈரானுடன் மோதிய போது, தீவிர அமெரிக்க ஆதரவாளராக அறியப்படும் ரணில், ஈரானிய அதிபரை,  சிறிலங்காவுக்கு அழைத்து அவருக்கு அன்பான வரவேற்பு அளித்தார்.

இருப்பினும், அமெரிக்கா அண்மையில் ஈரானை தாக்கியபோது, ஜேவிபி அரசாங்கம் தாக்குதலைக் கண்டித்து ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை.

வெளியிடப்பட்ட அறிக்கையில், அமெரிக்காவிற்கு எதிரான ஒரு வார்த்தை கூட இடம்பெறாமல் இருப்பதில் அரசாங்கம் கவனமாக இருந்தது.

பலஸ்தீன-இஸ்ரேலிய மோதல் வெடித்தபோது, பலஸ்தீனத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தி, கொழும்பை முற்றுகையிட்ட முதல் கட்சி ஜே.வி.பி. தான்.

ஆனால் தற்போதைய ஜே.வி.பி. அரசாங்கம், பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் கவனமாக இருந்து வருகிறது.

தீவிர அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஆதரவாளரான ரணில், நாட்டின் அதிபராக இருந்தபோது,  பலஸ்தீனர்களுக்கு ஒரு நாடு தேவை என்று ஒரு சர்வதேச மாநாட்டில் கூறினார்.

இன்று, பலஸ்தீனம் ஜே.வி.பி.க்கு ஒரு தடை செய்யப்பட்ட வார்த்தை.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடமிருந்து வெளிநாட்டு முதலீட்டைப் பெற முடியும் என்ற  நம்பிக்கையில் ஜே.வி.பி. அரசாங்கம் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டது.

ட்ரம்ப் வரிகளை விதித்தபோது, ஜே.வி.பி. அரசாங்கம் இன்னும் பயந்து, அமெரிக்காவின் முன்பாக மண்டியிட்டது.

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக ட்ரம்ப் வரிகளை அறிவித்தபோது, அதிபர் அனுரகுமார திசாநாயக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை அழைத்து, ஒரு தேசமாக நாம் அதை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறினார். அது ஒரு நல்ல முடிவு.

ஆனால் ட்ரம்ப் வரி விதிப்பை ஒத்திவைத்த போது, அனைத்துக் கட்சி கூட்டத்தை ரத்து செய்து, ட்ரம்ப் அரசாங்கத்துடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தி வரிகளைக் குறைக்கலாம் என்றும் அவர் முயன்றார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் வரிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய உலகின் ஒரே அரசாங்கம் தாங்கள்தான் என்று, ஜே.வி.பியின் பிரதி அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் பெருமையாகக் கூறினர்.

பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமானதாக இருந்ததாகவும், நேர்மறையான பதிலை எதிர்பார்ப்பதாகவும் கடந்த வாரம், ஒரு பிரதி அமைச்சர் கூறியிருந்தார்.

மற்றொரு துணை அமைச்சர், வெற்றியின் இரகசியத்தை இப்போது வெளியிட முடியாது என்று குறிப்பிட்டார்.

கடந்த புதன்கிழமை அந்த இரகசியம் வெளியானது.சிறிலங்காவுக்கு 30வீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இப்போது அரசாங்க அமைச்சர்கள், ட்ரம்ப் முன்னர் விதித்த 44 வீத வரியை,  30 வீதமாக  குறைக்க முடிந்திருப்பதாக கூறுகிறார்கள்.

சிறிலங்காவைத் தவிர, அல்ஜீரியா, ஈராக் மற்றும் லிபியா மீதும் டிரம்ப் 30 வீத வரிகளை

இந்த நாடுகள் மீது விதிக்கப்பட்ட வரி குறித்து பிராந்தியத்தில் உள்ள சர்வதேச ஊடகங்கள் எவ்வாறு செய்தி வெளியிட்டன என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘ஈராக்கிற்கு 30வீத வரி விதித்து அறைகிறார் ட்ரம்ப்’ – குளோபல் நியூஸ்

‘ 30 வீத வரியால் ஈராக், லிபியா, அல்ஜீரியாவை ட்ரம்ப் அறைகிறார்…’ – அரேபியா நியூஸ்.

‘நட்பை அதிகரிப்பது பற்றிய பேச்சுக்கள் இருந்தபோதிலும், அல்ஜீரியாவுக்கு 30வீத வரி விதித்து ட்ரம்ப் அறைந்துள்ளார்.

அந்த நாடுகளில் உள்ள பிராந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் ட்ரம்பின் 30 வீத வரியை இப்படித்தான் செய்தியாக வெளியிட்டன.

ட்ரம்ப் சிறிலங்காவுக்கு நிவாரணம் அளித்துள்ளதாக ஜேவிபி அரசாங்கம் கூறுகிறது.

ஒரு நாளைக்கு அமெரிக்காவுக்குச் செல்வேன் என்பது உலகெங்கிலும் உள்ள இளைஞர்கள் காணும் ஒரு கனவு.இது அமெரிக்க கனவு என்று அழைக்கப்படுகிறது.

அவர்கள் அமெரிக்கா சென்று பணக்காரர்களாக வேண்டும் என்று கனவு காண்கிறார்கள்.

வரலாற்றில் அமெரிக்க எதிர்ப்பு ஜேவிபி, ஆட்சிக்கு வந்தவுடன் இந்தக் கனவை நனவாக்கத் தொடங்கியது.

இது ஜேவிபி எதிர்க்கட்சியில் இருந்தபோது நட்பு கொண்டிருந்த ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற அமெரிக்க எதிர்ப்பு நாடுகளை கோபப்படுத்தியது.

இப்போது அந்தக் கனவு, ஜேவிபியின் தலை மீது மோதியுள்ளது.

ஆங்கில மூலம் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *