சம்பிக்க ரணவக்கவுக்கு மீண்டும் விளக்கமறியல்
வீதி விபத்தை ஏற்படுத்தி விட்டு, சாரதியின் மீது பழி போட்டு விட்டுத் தப்பிக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்றிரவு கைது செய்யப்பட்ட சம்பிக்க ரணவக்க, கொழும்பு பிரதம நீதிவான் முன்னிலையில் நிறுத்தப்பட்டிருந்தார். அதையடுத்து இன்று வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று காலை மீண்டும் சம்பிக்க ரணவக்க நீதிமன்றில் நிறுத்தப்பட்டார். அப்போது. சம்பிக்க ரணவக்கவின் சட்டவாளர்கள் அவரைப் பிணையில் விடுதலை செய்யும் கோரிக்கையை விடுத்தனர்.
எனினும், விசாரணைகள் ஆரம்பக் கட்டத்திலேயே இருப்பதால் அவரை விளக்கமறியலில் தொடர்ந்து வைக்குமாறு கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகள் கோரினர்.
இதையடுத்து பிணை மனுவை நிராகரித்த நீதிவான், சம்பிக்க ரணவக்கவை எதிர்வரும் 24ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.