கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க முன் பிணை கோரி ராஜித மனு
தம்மைக் கைது செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடுமாறு கோரி, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் முன் பிணை கோரும் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
நொவம்பர் 10ஆஆம் நாள், ராஜித சேனாரத்ன ஒழுங்கு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பாக இரண்டு பேர் தகவல்களை வெளியிட்டிருந்தனர்.
அந்த விவகாரம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வரும், குற்ற விசாரணைத் திணைக்களம், ராஜித சேனாரத்னவின் செய்தியாளர் சந்திப்பில் வெள்ளை வான் கடத்தல்கள் குறித்த தகவல்களை வெளியிட்ட இருவரையும் கைது செய்துள்ளது.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவையும் கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையிலேயே தம்மைக் கைது செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடுமாறு கோரி, கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் ராஜித சேனாரத்ன முன் பிணை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்தின் பிடியில் சம்பிக்க ரணவக்க அகப்பட்டுள்ளார் என்றும், விரைவில் ராஜித சேனாரத்னவும் அகப்படுவார் என்றும் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.