தீவிரவாதத்தை தோற்கடிப்பது குறித்து சீன பிரதமருடனும் மைத்திரி ஆலோசனை
சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று சீனப் பிரதமர் லீ கெகியாங்கை சந்தித்து பேச்சு நடத்தினார். பீஜிங்கில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது, தீவிரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் இரண்டு நாடுகளும் இணைந்து செயற்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன், சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் சீனாவின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இரண்டு தலைவர்களும் கலந்துரையாடினர்.
அதேவேளை, நேற்று பீஜிங்கில் நடந்த ஆசிய நாகரீகங்களின் கலந்துரையாடல் மாநாட்டிலும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு உரையாற்றினார்.
அதன்போது அவர், தீவிரவாதமும், மத அடிப்படைவாதமும் இன்றைய உலகின் முக்கியமான சவால்கள் என்றும், தீவிரவாதத்தை தோற்கடிப்பதற்கு, நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு முக்கியமானது என்றும் குறிப்பிட்டார்.
இதையடுத்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு சிறிலங்கா புறப்பட்டார்.
இன்று அதிகாலை அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கினார்.