மேலும்

றிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – சுதந்திரக் கட்சி தயக்கம்

சிறிலங்கா அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு செய்வதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி காலஅவகாசம் கோரியுள்ளது.

றிஷாத் பதியுதீனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையில் நேற்று முன்தினம் எதிர்க்கட்சியின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.

இது தொடர்பாக நேற்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து, இன்று இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளிப்பதென முடிவு செய்யப்பட்டது.

றிஷாத் பதியுதீனை சிறிலங்கா அதிபர் பதவி நீக்க வேண்டும் அல்லது அவர் பதவி விலக வேண்டும் என்றும், இல்லையேல் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்து அவரது பதவியை பறிக்கப் போவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிப்பதா இல்லையா என்று முடிவு செய்வதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி காலஅவகாசம் கோரியுள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று சீனாவில் இருந்து திரும்பிய பின்னர் அவருடன் கலந்தாலோசித்தே முடிவெடுக்கப்படும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

எனினும், அந்தக் கட்சியின் உறுப்பினர் எஸ்பி திசநாயக்க நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *