இந்திய கொமாண்டோக்கள் வரத் தேவையில்லை – மகிந்த
சிறிலங்காவில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இந்தியா தேசிய காவல்படை கொமாண்டோக்களை அனுப்ப வேண்டிய தேவை இல்லை என்று சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிஎன்என்-நியூஸ்18 தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
சிறிலங்காவுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும், வழங்குவதற்குத் தயார் நிலையில், இந்தியாவின் சிறப்புப் படைகள் தயார் நிலையில் இருப்பதாக, இந்திய அரசாங்க அதிகாரி ஒருவர், சிஎன்என்-நியூஸ்18 தொலைக்காட்சிக்கு கூறியிருந்தார்.
இதுகுறித்து, மகிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பிய போது,
“இந்த சதித் திட்டம் பற்றி முன்கூட்டியே தகவல்களை அளித்து இந்தியா உதவியிருக்கிறது.
ஆனால், தேசிய காவல் படை இங்கு வரத் தேவையில்லை. எமக்கு வெளிநாட்டுப் படையினர் உதவி தேவைப்படவில்லை.
இதனைக் கையாளும் திறன் எமது படையினருக்கு உள்ளது. அவர்களுக்கு தேவையான அதிகாரத்தையும், சுதந்திரத்தையுமே கொடுக்க வேண்டியிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.