குண்டுவெடிப்புகள் தொடர்பாக தேடப்பட்ட சகோதரர்கள், பெண் கைது
ஈஸ்டர் நாள் குண்டுவெடிப்புகள் தொடர்பாக தேடப்பட்டு வந்த மேலும் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று நாவலப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொகமட் இவுலாஹிம் சாதிக் அப்துல் ஹக், மொகமட் இவுலாஹிம் சாஹிட் அப்துல் ஹக் ஆகிய இரண்டு சகோதரர்களுமே வணிக நிலையம் ஒன்றுக்குள் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.
குண்டுவெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று ஆறு பேரின் படங்கள் மற்றும் விபரங்களை காவல்துறையினர் வெளியிட்டிருந்தனர். அவர்களில் இரண்டு பேரே இவர்களாவர்.
பெண்ணும் சிக்கினார்
தேடப்படுவதாக அறிவிக்கப்பட்ட ஆறு பேரில் ஒருவரான பாத்திமா லதீபா என்ற பெண், மாவனெல்ல பகுதியில் வெள்ளிக்கிழமை காவல்துறை மற்றும் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து. கம்பளையில் உள்ள பாதணி வணிக நிலையம் ஒன்றில் மறைந்திருந்த மொகமட் இவுலாஹிம் சாதிக் அப்துல் ஹக், மொகமட் இவுலாஹிம் சாஹிட் அப்துல் ஹக் இரண்டு பேரும் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
இவர்களின் உறவினரான, இந்த வணிக நிலையத்தின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, வணிக நிலையத்தின் உரிமையாளரின் வீட்டில் நடத்தப்பட்ட தேடுதலில், இராணுவ சீருடைகள் பலலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்காக பயன்படுத்துவதற்கு வைத்திருந்த பை ஒன்றும் கைப்பற்றப்பட்டது,
தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பரப்புரைகளுக்கு இந்த வீடு பயன்படுத்தப்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதேவேளை சந்தேக நபர்களை அனுராதபுரவில் இருந்து கம்பளைக்கு அழைத்து வந்த வாகனம் என சந்தேகிக்கப்படும் வான் ஒன்று நாவலப்பிட்டியில் உள்ள வீடு ஒன்றில் கைப்பற்றப்பட்டுள்ளது.
வீட்டின் உரிமையாளரும், வான் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.