மேலும்

தற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பு ஆடம்பர விடுதிகள்

கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, கொழும்பில் உள்ள பல ஐந்து நட்சத்திர ஆடம்பர விடுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கொழும்பு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கிங்ஸ்பெரி, சினமன் கிரான்ட், ஷங்ரி-லா விடுதிகள் உள்ளிட்ட 8 இடங்களில் நேற்று குண்டுகள் வெடித்திருந்தன.

இந்தக் குண்டுவெடிப்புகளால் மேற்படி விடுதிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டதுடன், உள்நாட்டவர்களும் வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து. கொழும்பு நகரில் உள்ள பல ஐந்து நட்சத்திர விடுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

பெரும்பாலான விடுதிகளின் முன்பாக ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

புதியவர்களுக்கு அனுமதியில்லை

நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை, புதிய விருந்தினர்களை விடுதிகளில் அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்திருப்பதாக தற்காலிகமாக மூடப்பட்ட விடுதிகளின் முகாமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விடுதிகளில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் சில தற்கொலைக் குண்டுதாரிகளால் மேற்கொள்ளப்பட்டன என்றும், குண்டுதாரிகள் அந்த விடுதிகளில் தங்கியிருந்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளதை அடுத்தே, இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அறைகளை முன்பதிவு செய்த ஒரே நபர்

கொழும்பில் குண்டுகள் வெடித்த மூன்று விடுதிகளிலும் ஒரு பெயருடைய நபரே, அறைகளை வாடகைக்கு பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

அவர் ஒரே பெயரில், ஒரே அடையாள அட்டையைப் பயன்படுத்தியே விடுதிகளில் தங்குவதற்கு அறைகளை வாடகைக்கு எடுத்துள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க நேற்று நடத்திய கூட்டம் ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

முகமட் அஸ்ஸம் முகமட் என்பவரே அறையை பதிவு செய்திருப்பதாக குண்டுவெடித்த ஒரு விடுதி தெரிவித்துள்ளது.

உணவு பரிமாறும் போது வெடித்துச் சிதறிய குண்டுதாரி

சினமன் கிரான்ட் விடுதியில் நேற்று காலை உணவு வேளையில் வரிசையின் நின்ற போதே, குண்டுதாரி குண்டை வெடிக்க வைத்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

கோப்பையுடன் வந்த அந்த நபருக்கு உணவு பரிமாறப்படும் போதே அந்த நபர் வெடித்துச் சிதறினார்.

அந்த நபரின் உடல் துண்டு துண்டாக கிடந்த நிலையில், காவல்துறையினர் எடுத்துச் சென்றதாக, விடுதி அதிகாரி ஒருவர் ஏஎவ்பியிடம் தெரிவித்துள்ளார்.

4 தற்கொலைக் குண்டுதாக்குதல்கள் 

நேற்று வெடித்த குண்டுகளில் நான்கு இடங்களில் தற்கொலைக் குண்டுதாரிகளே தாக்குதல் நடத்தினர் என்று அரசாங்க பகுப்பாய்வாளர் ஒருவர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

கிங்ஸ்பெரி மற்றும் ஷங்ரி-லா விடுதிகளிலும், கொச்சிக்கடை அந்தோனியார் மற்றும் நீர்கொழும்பு செபஸ்தியார் தேவாலயங்களிலும தற்கொலைக் குண்டுதாரிகளே குண்டுகளை வெடிக்க வைத்துள்ளனர் என்று அவர் உறுதி செய்துள்ளார்.

ஷங்ரி-லா, கிங்ஸ்பெரிக்கு பூட்டு

கொழும்பில் நேற்று குண்டுவெடிப்பு நிகழ்ந்த ஷங்ரி-லா விடுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக, அதன் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

அதேவேளை கிங்ஸ்பெரி விடுதியும் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும், விடுதியில் ஏற்பட்டுள்ள சேதங்கள் திருத்தியமைக்கப்பட்டதும் திறக்கப்படும் என்றும் அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனினும், சினமன் கிரான்ட் விடுதி அதிகாரபூர்வமாக இன்று மூடப்படவில்லை.

அதேவேளை, நேற்றைய குண்டுவெடிப்புகளை அடுத்து இந்த மூன்று விடுதிகளிலும் இருந்தவர்கள், வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *