மேலும்

120 இந்திய இராணுவத்தினருடன் கட்டுநாயக்க வந்த இந்திய விமானப்படை விமானம்

சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து நடத்தவுள்ள கூட்டுப் பயிற்சிக்காக, இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 120 பேர் நேற்று விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்திய- சிறிலங்கா இராணுவத்தினர் இணைந்து ஆண்டு தோறும் நடத்தும் “மித்ரசக்தி“ என்ற கூட்டுப் பயிற்சியின் ஆறாவது கட்டம் இன்று தியத்தலாவவில் ஆரம்பமாகவுள்ளது.

ஏப்ரல் 8ஆம் நாள் வரை தொடர்ந்து நடைபெறவுள்ள இந்தக் கூட்டுப் பயிற்சியில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 11 அதிகாரிகள் உள்ளிட்ட 120 படையினரும், சிறிலங்கா இராணுவத்தின் கெமுனு காவல்படையின் 120 படையினரும் பங்கேற்கின்றனர்.

இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கும் பிகார் ரெஜிமெட்டின் 1 ஆவது பற்றாலியனைச் சேர்ந்த  120 இந்திய இராணுவத்தினரை ஏற்றிய, இந்திய விமானப்படையின் IL-76 விமானம் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்திய இராணுவத்தினருக்குப் பொறுப்பாக, கேணல் பார்த்தசாரதி ராய், கேணல் சோம்பித் கோஷ், மேஜர் புஜம் மான்ஹாஸ், மேஜர் றோகித் குமார் திரிபாதி ஆகிய அதிகாரிகளும் சிறிலங்கா வந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *