மேலும்

கூட்டமைப்புடன் சிறிலங்கா அதிபர் ஒன்றரை மணிநேரம் பேச்சு

இரா.சம்பந்தன் தலைமையிலான, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து நீண்ட பேச்சுக்களை நடத்தியது.

இரா.சம்பந்தன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன்,  த.சித்தார்த்தன், எம் ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தப் பேச்சுக்களில் கலந்து கொண்டனர்.

சிறிலங்கா அதிபரின்  அழைப்பின் பேரில், இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்றது.

இந்தப் பேச்சுத் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை தொடர்பில் மிக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது சிறிலங்கா அதிபர்  சில முடிவுகள் எடுக்கப்பட்டதன் பின்னணி குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் குழுவினருக்கு விளக்கமளித்தார்.

அதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பினாலும்  அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கான காரணங்களை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் சிறிலங்கா அதிபருக்கு  எடுத்துக் கூறினார்கள்.

இந்தத் தீர்மானங்கள் ஏற்கனவே பகிரங்கமாக முழு நாட்டிற்கும் உலகிற்கும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

தாம் ஏற்கனவே எடுத்த தீர்மானங்களை மாற்ற முடியாது என்றும் அந்தத் தீர்மானங்களின்படியே தாம் செயற்படுவோம் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்கிக் கூறினர்.

அனைத்து கட்சிகளினுடைய இணக்கப்பாட்டோடு, நாட்டின்அரசியல் சூழ்நிலையை  சுமூக நிலைக்குக் கொண்டுவருவதற்காக, எதிர்காலத்தில் சிறிலங்கா அதிபர்  எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அவரோடு கலந்தாலோசித்து,  தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது முழுமையான ஆதரவைக் கொடுக்கும் என்றும் அவர்கள் உறுதியளித்தார்கள்.

இந்தநிலையை விரைவாக அடைவதற்கு தற்போது யோசித்துள்ள நாளுக்கு முன்னதான ஒரு நாளில் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டுமென்று சிறிலங்கா அதிபருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

இந்த வேண்டுகோளை தான் கவனமாக ஆராய்வதாக சிறிலங்கா அதிபர் உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *