மேலும்

அரசியல் கைதிகள் விவகாரம் – செவ்வாயன்று மற்றொரு கலந்துரையாடல்

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மற்றொரு கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பாக அலரி மாளிகையில் நேற்றுமுன்தினம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன், நீதியமைச்சர் தலதா அத்துகோரள, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்குமாறு இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருந்தார்.

அதேவேளை, அரசியல் கைதிகளுக்கு எதிரான வழக்குகளை விரைவாக விசாரிக்க நடவடிக்கை எடுப்பதாக, சட்டமா அதிபர் உறுதியளித்திருந்தார்.

இந்தநிலையில், அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு தீர்வு காண்பது தொடர்பாக மற்றொரு சுற்று கலந்துரையாடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

நீதியமைச்சில் நடக்கவுள்ள இந்தக் கலந்துரையாடலில், கூட்டமைப்பு மற்றும் அரசதரப்பு பிரதிநிதிகள் பங்கேற்பர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *