மேலும்

மைத்திரி, ரணிலுக்கு சம்பந்தன் அவசர கடிதம் – இன்று திருமலையில் முக்கிய சந்திப்பு

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு, வாய்ப்புத் தருமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடமும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமருக்கு இரா.சம்பந்தன், கடிதங்களை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், சிறிலங்கா அதிபருடனான கடந்த சந்திப்பின் போது,  எடுக்கப்பட்ட முடிவுகள்  இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே மற்றொரு சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்ட வேண்டும் என்றும், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை உறுதிப்படுத்தும் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அனுராதபுர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகள் இன்று ஆறாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையிலேயே இரா.சம்பந்தன் சிறிலங்கா அதிபர், பிரதமரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

அதேவேளை, இன்று திருகோணமலைக்குச் செல்லவுள்ள சிறிலங்கா அதிபரை, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்றும், இதன்போது அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து அவர் பேசுவார் என்றும் மற்றொரு தகவல் கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *