மேலும்

பாக்குநீரிணையின் இரு கரைகளும் பாதுகாப்பான எதிர்காலமும் – லோகன் பரமசாமி

தமிழகத்தில்திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக மு.க. ஸ்ராலின் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். முற்றிலும் ஒரு புதிய எதிர்காலத்தை நோக்கி கழகத்தையும் தமிழினத்தையும் அழைத்து செல்வதாக தனது தந்தையார் இறந்ததன் பின்னான முதலாவது பொதுக்குழுக் கூட்டத்தில் ஸ்ராலின் கூறி இருக்கிறார்.

தற்போதைய நிகழ்வுகள் யாவும் திராவிட முன்னேற்ற கழகத்தின் புதிய எண்ணக்கருத்து உருவாக்கல் என்ற ஒரே நோக்தை கொண்டதாகவே இருப்பது போல் தெரிகிறது. தலைமைத்துவ மாற்றம் மிகவும் அவதானமாக எந்தவித சலசலப்பும் ஏற்படாத வகையில் ஏகமனதாக ஸ்ராலின் அவர்கள் தெரிவுடன் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

முன்னைநாள் தலைவர் கருணாநிதி அவர்களுக்கு என நடாத்தப்பட்ட புகழ்அஞ்சலி கூட்டத்தில் பல்வேறு ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் பங்குபற்றி இருந்தபோதும் எவரும் ஈழத்தமிழர் குறித்து பேசவில்லை. ஆக கருணாநிதி அவர்களின் சாவுடன் ஈழத்தமிழர் மீதான திமுகவின் பழைய அரசியல் கொள்கைகளும் செத்துவிட்டது போன்ற ஒரு எண்ணப்பாடு உருவாகியுள்ளது போல் தோற்றமளிக்கிறது.

ஈழத்தமிழர் விவகாரம் குறித்து எவரும் எதுவும் பேசாது விட்டது என்பது எங்கே திமுகவின் பலவீன புள்ளி இருக்கிறது என்பதை சற்று நெருடலாக சொல்லி நிற்கிறது. அதேவேளை தமிழகத்தின் தற்போதைய நிலை பல்வேறு சிக்கல்களை கொண்டிருக்கிறது என்பதுவும் உன்மைதான்.

பொருளாதார ரீதியாக தமிழகம் கடந்த ஒரிரு வருடங்களாக வளர்ச்சிவேக குறைவை கண்டு வந்துள்ளது. கடந்த காலங்களில் கைத்தொழில் பேட்டைகளின் சக்தி மையமாக திகழ்ந்த தமிழகம் இன்று சற்று தளம்பல் நிலையை கண்டிருக்கிறதோ என்ற எண்ணத்தை, பொருளாதார ஆய்வாளர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்ச்சியாக பல்வேறு தாக்கங்களை இயற்கை அழிவுகளையும் அரசியல்நிலை அற்றதன்மையையும் தமிழ்நாடு தாங்கிக் கொண்டிருக்கிறது.  2015 ஆம் ஆண்டு சென்னை மாநகரம் பெரும் வெள்ளப்பெருக்கை சந்தித்தது. தொடர்ந்து சூறாவளி தாக்கதலுக்கு உள்ளானது. அரசியல் ரீதியாக 2016ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அம்மையார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்பு இறந்தார். இந்தநிகழ்வு தமிழ்நாடு முழுவதுமாக பெரும் தாக்கத்தை உருவாக்கி இருந்தது.

2017 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஆளும்கட்சியான அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் பெரும் அரசியல் குழறுபடிகள் ஏற்பட்டது. இருவர் முதலமைச்சர் பதவிக்காக போட்டி போட்டனர். அரசியல் தலைமையில்ஏற்பட்ட  பாரிய தளம்பல்களும் பொருளாதார முன்னேற்றத்தை பெரும்பாதிப்பிற்கு உள்ளாக்கின.

மத்தியில் ஆளும்கட்சியான பாரதீய ஜனதா கட்சி தனது செல்வாக்கை செலுத்தும் விதமாக ஆளுமை வீரியம் குறைந்த முதலமைச்சர்கள் ஊடாகவும், பொதுசன ஊடகங்களின் ஊடாகவும் குழப்பங்களை விளைவித்தது. அதேவேளை தூத்துகுடியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தமிழ்நாட்டு அரசாங்கத்தை பெரும் அழுத்தத்திற்கு உள்ளாக்கியது.

உலகம் தகவல் தொழில்நுட்பத்துறையில் மிகவேகமாக முன்னேறிவரும் இக்காலத்தில் அரசியல் தளம்பல்களும் இயற்கை அனர்த்தங்களும் மிகப்பெரிய தாக்கங்களை விளைவிக்கவல்லன. தகவல் தொழில்நுட்பத்திலே முதலீட்டாளர்களை கவர்ந்திழுப்பதற்கு தொழில்நுட்ப கற்கை திறமைகள் மட்டும் இருந்தால் போதாது. அரசியல், சமூகவாழ்வு, பொருளாதார முதலீட்டிற்கு உகந்தாக காணப்படவும் வேண்டும்.

பாதுகாப்புக் கெடுபிடிகளும், அரசியல்கலவரங்களும், உள்ளுர் வன்முறைகளும் பொருளாதார வளர்ச்சிக்குத் தகுந்த காலநிலையைக் கொடுக்காது. ஆனால் வீரியமற்ற பிராந்திய அரசாங்கங்களை தனது தேவைகளுக்கு ஏற்றவகையில் பயன்படுத்தும் பொருட்டு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கூறுகளை பயன்படுத்தி குழப்பங்களின் ஊடாக கட்டுப்படுத்தும் போக்கே தமிழ்நாட்டில் நிகழ்ந்து வருகிறது.

தமிழகத்தின் நீர்ப் பராமரிப்பும், உணவுப் பாதுகாப்பு குறித்த எதிர்காலமும் முக்கிய எச்சரிக்கை ஒலி எழுப்பிய வண்ணம் உள்ளது. ஆறுகள் கோடைகாலத்தில் வற்றிப்போவதும், மழைகாலங்களில் பெருக்கெடுத்தோடுவதுடன், உபரியாக கடலில் சேருவதுவும். விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப வளங்கள் சீரமைக்கப்படாமையும் உணவு உற்பத்தியில் பெரும் தாக்கத்தை விளைவிக்கின்றது.

அதேவேளை சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் ஊடாகவும் அரசியல் தளம்பல்நிலை ஏற்பட்டுள்ளது. எழுபதுகளில் Populism என்று குறிப்பிடக்கூடிய சனரஞ்சகவாதத்திற்கு தமிழ்நாடுமுக்கிய உதாரணமாகஇருந்தது. இதற்குக் காரணம் அன்றைய சினிமா நட்சத்திரமான எம்ஜி இராமச்சந்திரன் தனிக்கட்சி ஆரம்பித்து பெரும் அரசியல் வெற்றிகளைக் குவித்திருந்தார். அதே சினிமா சனரஞ்சக அரசியல் காலம்பல கடந்தும் இன்னமும் தமிழ்நாட்டில் சனநாயக பண்பாட்டுஅரசியலுக்கு முட்டுகட்டையாக இருந்து வருகிறது.

ஆனால் சமூக விழிப்புணர்வுகளை உருவாக்குவதில் சினிமா துறையினர் தமது மக்கட் செல்வாக்கைப் பயன்படுத்தி சமூகநலன் சார்ந்த வகையில் செயற்படுவது அவர்களது துறையோடு இணைந்த வகையில் பார்க்கலாம். ஆனால் முற்றுமுழுதான அரசியல் அதிகாரம் நோக்கிய செயற்பாடுகள் சனநாயக ஆட்சிக்கு உகந்ததல்ல .

அதேபோல ஏற்கனவே அரசியலில் இருக்கும் அரசியல்வாதிகள் தமது மரணப்படுக்கை வரை அரசியல் அதிகாரத்தில் இருக்க எண்ணுவதுவும் சிறந்த சனநாயக வளர்ச்சிக்கு ஏற்றதல்ல.

இவ்வாறு பல்வேறு அரசியல் சமூக பொருளாதார சிக்கல்களில் தமிழ்நாடு இருந்து வரும் அதேவேளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை மாற்றம் நிகழ்திருக்கிறது.

ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் தேவையை வலியுறுத்தும் இந்திய ஆய்வாளர்கள், பூகோள அரசியலில் சீன பொருளாதார சமனிலையாக்கல் கொள்கையையே மையப்படுத்தி சிந்திக்கின்றனர். இதன்பலனாக எந்த மாநிலத்திலும் நிதிமுதலீடு வியாபாரம் என்பனவே முதன்மைப்படுத்தப்பட்டு இருக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. இதில் தமிழ்நாடு எந்தவித்திலும் விலகியதாக தெரியவில்லை.

திமுகவின் முன்னய ஆட்சிகளிலும் வியாபார நோக்கத்திலான முதலீடுகளிலே குடும்பத்தவர்களின் செல்வாக்கு அதிகரித்து இருந்ததுவும் இதற்கு நல்ல உதாரணம். இந்தநிலையில், எந்த பொருளாதார நலன்களையும் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆகவே ஈழத்தமிழர் பிரச்சினையை தலைவர் கருணாநிதி இல்லாத புதிய திமுகவும் கையாளும் என்று எதிர்பார்க்க முடியாது.

அதேவேளை மத்திய அரசின் அதிகாரவரம்புகளுக்கு மேலாக வெளியுறவு கொள்கையில் தலையிட முடியாது என்ற சாக்குபோக்குகளும் சிறீலங்கா இன்னுமொர் தேசம் சர்வதேச விதிமுறைகளை மீறுவது இறையாண்மையில் தலையிடுவது போல் ஆகிவிடும் போன்ற காரணங்களையும் திமுக தரப்பினர் கூறுவதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

இந்தியாவின் பிரதான நீரோட்ட கட்சிகளான காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி போன்றன தமிழ்நாட்டிலே தலை எடுக்க முடியாது. ஆனால் மாநில தேசிய  கட்சிகளை தமது பதிலாள் ஆக பயன்படுத்தும் போக்கே இவ்விரு கட்சிகளிடமும் இருக்கிறது.

அண்மையில் பேட்டி ஒன்றிலே எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரசுடனும் இதர மாநில கட்சிகளுடனும் கூட்டு சேர்ந்து தேர்தலில் பங்குபற்றலாம் என்று வைகோ அவர்களே குறிப்பிட்டிருந்தார்.

இந்தவகையில் ஆட்சியை கைப்பற்றும் போக்கில் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த விவகாரம் இரண்டாவது நிலைக்குத் தள்ளப்படுகிறது. அவரவர் சொந்த அரசியல் நலன்களும் பொருளாதார நலன்களும் முதல் விவகாரமாக்கப்பட உள்ளன என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது..

இத்தகைய பார்வையிலான நிலையற்ற தொப்புள்கொடி உறவை உறுதிபெற செய்யும் வகையில் இருக்கக்கூடிய காரணிகளாக ஈழஆதரவு செயற்பாட்டாளர்களும், சிறீலங்கா அரசாங்க மாற்றமுமே அமைந்திருக்கின்றன . இவை இரண்டும் உணர்வுரீதியாக ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் சக்திகளாவதுடன் இன பேதத்தை உருவாக்க வல்லன.

அதேவேளை தமிழ்நாடு இன்று சித்தாந்த ரீதியாக குழம்பிப்போய் உள்ளது போன்ற மனக்காட்சியையே தருகிறது. திராவிடவாதம், சுயமரியாதைவாதம் என்று இருந்த தமிழ்நாடு தலைவர்கள் ஒருவரை ஒருவர் வசைபாடிக் கொள்ளும் நிலையையே அரசியல் தலைமைத்துவத்தின் மத்தியில் காணக்கூடியதாக உள்ளது.

தமிழ்நாட்டிலும் இலங்கையின் வடக்கு-கிழக்குபகுதியிலும் புதிய அரசியல்மாற்றங்கள் தோன்றிவரும் இவ்வேளையில் அரசியல் பொருளாதார கலாசார உறவை புதிப்பிக்கும் வகையில் செயற்பாடுகள் அமைந்திருக்க வேண்டி உள்ளது . பாக்குநீரிணை பாதுகாப்பு மூலோபாய சிந்தனை தமிழ் அறிவியல் சார் சமூகத்திடம் எழவேண்டும். இதற்கான மகாநாடுகள் அறிவுபூர்வமாக, பல்கலைக்கழக மட்டத்திலும் கல்வியாளர் மட்டத்திலும் புதிய வகையிலான உறவை உருவாக்கும் நிலை ஏற்படுவதே சிறந்ததாக தெரிகிறது.

– லண்டனில் இருந்து ‘புதினப்பலகை’க்காக லோகன் பரமசாமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *