ரஷ்யாவுக்கான தூதுவராகிறார் தயான் – அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் புதிய தூதுவர்கள்
ரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள, கலாநிதி தயான் ஜயதிலக, தனது கடமையைப் பொறுப்பேற்பதற்காக, எதிர்வரும் 31ஆம் நாள் மொஸ்கோவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபரால் ரஷ்யாவுக்கான தூதுவராக பெயரிடப்பட்ட தயான் ஜயதிலகவை, உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு ஏற்றுக் கொள்வதற்கு முதலில் மறுத்திருந்தது.
எனினும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் விடாப்பிடியான நிலைப்பாட்டினால், உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு அவரது நியமனத்துக்கு அங்கீகாரம் அளித்திருந்தது.
இந்த நிலையிலேயே தயான் ஜயதிலக எதிர்வரும் 31ஆம் நாள் ரஷ்யாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
இதற்கிடையே, சிறிலங்கா வெளிவிவகார இராஜாங்க அமைச்சரின் செயலராக பணியாற்றும் கிரேஸ் ஆசீர்வாதம் பிரசெல்சில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.
அதேவேளை, பல மாதங்களாக வெற்றிடமாக உள்ள அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் பதவிக்கு, ரொட்னி பெரேரா நியமிக்கப்படவுள்ளார். இவர் தற்போது, ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதுவராகப் பணியாற்றுகிறார்.
இவரது இடத்துக்கே, கிரேஸ் ஆசீர்வாதம் நியமிக்கப்படவுள்ளார்.