சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தரங்கு வியாழன்று ஆரம்பம்
சிறிலங்கா இராணுவத்தின் ஏற்பாட்டில், ‘கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு – 2018’ எதிர்வரும் 30ஆம் நாள் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.
எட்டாவது தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்தக் கருத்தரங்கு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும், 30ஆம் நாள் தொடங்கி, 31 ஆம் நாள் வரை நடைபெறும்.
இந்தப் பாதுகாப்புக் கருத்தரங்கில், 100 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உள்ளிட்ட 800 பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்ப்பதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தக் கருத்தரங்கில் 13 வெளிநாட்டு 14 உள்நாட்டுப் பேச்சாளர்கள் உரையாற்றவுள்ளனர்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராகப் பங்கேற்கும் இந்தக் கருத்தரங்கில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முக்கிய உரை ஆற்றவுள்ளார். சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன வரவேற்புரை நிகழ்த்தவுள்ளார்.
இந்தக் கருத்தரங்கிற்கு சார்க் நாடுகளின் இராணுவத் தளபதிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த பாதுகாப்புக் கருத்தரங்கில் 35 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.