வடக்கு- கிழக்கில் பாரிய வீதி அபிவிருத்தி திட்டம் – இந்தியாவுடன் சிறிலங்கா பேச்சு
வடக்கு, கிழக்கில் பாரிய வீதி அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுப்பது குறித்து இந்திய அரசாங்கத்துடன் சிறிலங்கா அரசாங்கம் கலந்துரையாடியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் நெடுஞ்சாலைகள் அமைச்சும், வடக்கு அபிவிருத்திக்கான அதிபர் செயலணியுமே, இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளன.
அத்துடன் ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
வடக்கில், பாரிய தொடருந்து, மற்றும் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டங்களிலும், ஏனைய பல சிறிய அபிவிருத்தித் திட்டங்களிலும், இந்தியா ஏற்கனவே பங்களித்து வந்துள்ளது.
அதேவேளை பலாலி விமான நிலைய மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டங்களை இந்தியா முன்னெடுக்கவுள்ளது.
இந்த நிலையிலேயே, வடக்கில் பாரியளவில் வீதி அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுப்பது குறித்து இந்தியாவுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.
எனினும், நெடுஞ்சாலைகள், சுங்கவழிச் சாலைகள், துணைச் சாலைகள் அல்லது வீதி புனரமைப்பு விடயத்தில், என்ன தேவை என்பதை, சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் சரியாக இந்தியாவுக்குத் தெரிவிக்கவில்லை என்று உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.