திருகோணமலைத் துறைமுகத்தை பார்வையிட்டார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா இன்று திருகோணமலைத் துறைமுகத்துக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.
திருகோணமலை கடற்படைத் தளத்தில் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சருக்கு சிறிலங்கா கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சருக்கு திருகோணமலைத் துறைமுகம் தொடர்பாக சிறிலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்திய தளபதியினால் விளக்கம் அளிக்கப்பட்டது.
அத்துடன் தனது பயணத்தை நினைவுபடுத்தும் வகையில், டொக்யார்ட் தளத்தில் மா மரம் ஒன்றையும் அவர் நாட்டினார்.
திருகோணமலைத் துறைமுத்தில் தற்போது தரித்து நிற்கும் ஜப்பானிய கடற்படையின் நாசகாரி கப்பலான ‘இகாசுச்சி’க்கு சென்று ஜப்பானிய கடற்படை அதிகாரிகளுடனும், இட்சுனோரி ஒனோடெரா கலந்துரையாடினார்.
அத்துடன் சிறிலங்கா கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு ஒன்றில் திருகோணமலைத் துறைமுகத்தையும் அவர் சுற்றிப் பார்வையிட்டுள்ளார்.