மேலும்

அடுத்த சில நாட்களில் கைதாகிறார் சிறிலங்காவின் உயர்மட்டப் படைத் தளபதி?

கொழும்பில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய, குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்காவின் உயர்மட்டப் படை அதிகாரி ஒருவர் அடுத்த சில நாட்களுக்குள் கைது செய்யப்படவுள்ளார்.

சிறிலங்கா காவல்துறை தலைமையக வட்டாரங்களை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கில் முக்கிய சந்தேக நபரான, லெப்.கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சியைக் கைது செய்வதற்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு உதவிய சந்தேக நபர்களையும் கைது செய்யுமாறு, கோட்டே நீதிவான் லங்கா ஜெயரத்ன உத்தரவிட்டுள்ளார் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, லெப்.கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சி நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு, முன்னாள் கடற்படைத் தளபதியும், தற்போதைய கூட்டுப் படைகளின் தளபதியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உதவியாகவும், உடந்தையாகவும் இருந்தார் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கைது செய்யப்படவுள்ள படை அதிகாரியின் பெயரை கொழும்பு ஊடகம் வெளியிடாத போதிலும், அட்மிரல் ரவீந்திர விஜேகுணத்னவாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *