பதவி விலகினார் கபீர் காசிம் – சிறிகொத்தாவில் கொண்டாட்டம்
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலர் பதவியில் இருந்து, விலகுவதற்கு முடிவு செய்திருப்பதாக அமைச்சர் கபீர் காசிம் அறிவித்துள்ளார்.
ஐதேகவின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தாம் இன்று பதவி விலகல் கடிதத்தை கையளிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐதேகவில் மேற்கொள்ளப்படவுள்ள உள்ளக மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கிலேயே தாம் பதவி விலகியிருப்பதாகவும் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கூட்டு எதிரணியின் நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடித்த, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்வு இன்று தேக தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்றது.
இதில் ஐதேகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் பெருமளவு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.