சுதந்திரக் கட்சியினர் 22 பேர் கூட்டு அரசில் இருந்து வெளியேறுகின்றனர்
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்புக்குப் பின்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ளனர்.
நம்பிக்கையில்லா பிரேரணையில் சிறிலங்கா பிரதமருக்கு எதிராக வாக்களித்த பின்னர் கூட்டு அரசாங்கத்தை விட்டு 22 சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் வெளியேறவுள்ளனர்.
அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த இந்த தகவலை சிறிலங்கா பிரதமருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக, அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.
நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம ஜெயந்த, அனுர பிரியதர்சன யாப்பா உள்ளிட்டவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.
இதற்கிடையே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 13 அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர்கள் சுசில் பிரேம ஜெயந்த, அனுர பிரியதர்சன யாப்பா, எஸ்.பி.திசநாயக்க, தயாசிறி ஜெயசேகர, சுசந்த புஞ்சிநிலமே, சுதர்சனி பெர்னான்டோ புள்ளே, ஜோன் செனிவிரத்ன, சந்திம வீரக்கொடி, டிலான் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 120 வாக்குகளும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, புதிய கூட்டு அரசின் அமைச்சரவை வரும் திங்கட்கிழமை பதவியேற்கவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.