கூட்டணிக் கட்சிகள் ரணிலுக்கு ஆதரவு
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில், அதனை எதிர்த்து வாக்களிக்க, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐதேகவின் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் முடிவு செய்துள்ளன.
மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயற்குழு நேற்று மாலை கூடி ஆராய்ந்த பின்னர், நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இதற்கமைய, தமிழ் முற்போக்கு கூட்டணியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களிப்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசின் 6 உறுப்பினர்களும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேற்று ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக நேற்றிரவு அறிவித்துள்ளது.
நீண்ட கலந்துரையாடல்களுக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஜாதிக ஹெல உறுமயவும் ஏற்கனவே இந்தப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனால், ஐதேகவின் கூட்டணிக் கட்சிகளை நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக திருப்புவதில் கூட்டு எதிரணி தோல்வியைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.