மேலும்

கூட்டு அரசாங்கம் தொடராது – சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் எச்சரிக்கை

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்து நீக்கப்படாவிடின், வரும் ஏபரல் 4ஆம் நாளுக்குப் பின்னர் கூட்டு அரசாங்கம் பதவியில் இருக்காது என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் நேற்று சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர்கள் சுசில் பிரேம ஜெயந்த, டிலான் பெரேரா, லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன ஆகியோர் இதனைத் தெரிவித்தனர்.

“ஏப்ரல் 4ஆம் நாளுக்குப் பின்னரும், கூட்டு அரசாங்கம் பதவியில் இருப்பதற்கு,  ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது தான் ஒரே வழியாகும்.

ஐதேகவுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பன 2020 வரை கூட்டு அரசாங்கத்தைத் தொடர்வதற்கு ஒரே தடையாக இருப்பது ரணில் விக்கிரமசிங்க தான். எனவே அவர் பதவி விலக வேண்டும்.

யாரும் இன்னொரு தேர்தலை விரும்பவில்லை. அரசாங்கத்தை கவிழ்க்கவும் விரும்பவில்லை.

இந்த அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், அரசாங்கத்தின் பங்காளிகளாக உள்ள, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள், ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *