யாழ். மாநகரசபை ஆசனப் பிரச்சினை – உலக வங்கி உதவியுடன் தீர்வு
யாழ்ப்பாண மாநகர சபையின் ஆசனப் பிரச்சினை உலக வங்கியின் உதவியுடன் தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடந்த தேர்தலில், புதிதாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் இந்த எதிர்வரும் 20ஆம் நாள் ஆரம்பமாகவுள்ளது.
உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை, முன்னரை விட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதால், பல்வேறு சபைகளிலும் சபை அமர்வுகளை நடத்துவதற்கான வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் 119 உறுப்பினர்களும் இணைந்து சபை அமர்வுகளை நடத்த இடவசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய சபைகளின் அமர்வுகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த கணிசமான நிதி செலவிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் யாழ். மாநகர சபையின் முதல் அமர்வு வரும் 26ஆம் நாள் நடைபெறவுள்ளது.
யாழ். மாநகரசபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 44 உறுப்பினர்களும், இணைந்து அமர்வுகளை நடத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
உலக வங்கியினால் மூலோபாய நகர அபிவிருத்தித் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்தே, சபை உறுப்பினர்களுக்காக புத்தம்புதிய ஆசனங்கள் வாங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.