சிறிலங்காவுக்கு மேலும் 3 ரோந்துக் கப்பல்களை வழங்குகிறது அவுஸ்ரேலியா
சிறிலங்காவுக்கு இந்த ஆண்டு மேலும் மூன்று ரோந்துக் கப்பல்களை அவுஸ்ரேலியா வழங்கவுள்ளது. சிறிலங்காவின் கடல்சார் கண்காணிப்புத் திறனை வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்தக் கப்பல்கள் வழங்கப்படவுள்ளன.
இந்த ஆண்டு போர்ட் வகையை (Port Class vessels) சேர்ந்த மூன்று கண்காணிப்புக் கப்பல்கள் சிறிலங்காவின் கடலோரக் காவல்படைக்கு வழங்கப்படும்.
அவுஸ்ரேலியத் தூதுவர் பிரைஸ் ஹட்சிசன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
2014ஆம் ஆண்டு சிறிலங்கா கடற்படைக்கு அவுஸ்ரேலியா வழங்கியிருந்த இரண்டு பே வகை (Bay Class) கண்காணிப்புக் கப்பல்களுக்குத் தேவையான இரண்டு இயந்திரங்களைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று காலி துறைமுகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்விலேயே மேலும் மூன்று கண்காணிப்புக் கப்பல்களை அவுஸ்ரேலியா வழங்கவுள்ளதாக, பிரைஸ் ஹட்சிசன் கூறினார்.
ஆட்கடத்தலை தடுப்பதற்கான, அவுஸ்ரேலியாவின் மிகச் சிறந்த பங்காளனாக சிறிலங்கா விளங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.