கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் – சிறிலங்கா இணக்கம்
இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பு தொடர்பாக, இருதரப்பு ஒத்துழைப்பை ஊக்குவிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஜப்பானிய பிரதமர் சின்ஷோ அபேக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று ஜப்பானியப் பிரதமர் சின்ஷோ அபேயை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இதன்போதே இந்த இணக்கப்பாடு காணப்பட்டதாக ஜப்பானிய பிரதமர் செயலகத்தை மேற்கோள்காட்டில், கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஆற்றலை, சிறிலங்கா வலுப்படுத்திக் கொள்வதற்கு ஜப்பான் உதவும் வகையில், இரண்டு நாடுகளும் முன்நோக்கிய இருதரப்பு பாதுகாப்பு பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கும், இந்தச் சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை ஜப்பானின் உதவியுடன் தரமுயர்த்துவதற்கும் இணக்கம் ஏற்பட்டுள்ளது.
கிழக்காசியா தொடக்கம் ஆபிரிக்கா வரை உறுதித்தன்மையை உறுதிப்படுத்துவதை நோக்காகக் கொண்ட, ஜப்பானின் சுதந்திரமான திறந்த இந்தோ- பசுபிக் மூலோபாய கொள்கையை ஊக்குவிக்கும் வகையில் இந்த இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் சிறிலங்காவுக்கு மருத்துவ , சுகாதார சேவைகளை முன்னேற்றுவதற்காக 99.5 மில்லியன் டொலர் கடனையும் ஜப்பான் வழங்கவுள்ளது.