முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், 27 வாணிப நிலையங்கள், வீடுகள் தீக்கிரை
கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் திகண பகுதியில் நேற்று நடத்தப்பட்ட இனவாத தாக்குதல்களின் போது, முஸ்லிம்களுக்குச் சொந்தமான 27 வாணிப நிலையங்கள், பல வீடுகள், ஒரு பள்ளிவாசல் என்பன தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று நடந்த வன்முறைகளினால் திகண பிரதேசம் எங்கும் போர்க்களம் போல காட்சியளித்தது. வீதிகளில் ரயர்கள் எரிக்கப்பட்டதாலும், முஸ்லிம்களின் வீடுகள், வாணிப நிலையங்கள் எரிக்கப்பட்டதாலும், எங்கும் கருமையான புகை மூட்டமாக இருந்தது.
இதனிடையே, திகண பகுதியில் இரண்டு பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் இடம்பெறக் கூடும் என்றும், அதனால் பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்யுமாறும் காவல்துறையினரிடம் முன்னரே கேட்டுக் கொண்ட போதும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றம்சாட்டியுள்ளார்.
முஸ்லிம்களை வீடுகளுக்குள் இருக்குமாறு காவல்துறை அதிகாரிகள் கூறினர். அதன்படி, வாணிப நிலையங்களை மூடிவிட்டு அவர்கள் வீடுகளுக்குள் இருந்த போதே, வாணிப நிலையங்கள் தீயிடப்பட்டு நாசமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, முஸ்லிம்களின் வாணிப நிலையங்களைத் தீயிட்டு எரித்தவர்கள் என்ற சந்தேகத்தில் 24 சிங்களவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை விடுவிக்கக் கோரி தெல்தெனிய காவல் நிலையத்தின் முன்பாக சிங்களவர்கள் திரண்டு ஆரப்பாட்டம் நடத்திய போது, அவர்களைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீச்சை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.