தனது சகோதரரை முகமாலைக்கு அனுப்பினார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்
கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் பிரகடனத்தின் சிறப்புத் தூதுவரான ஜோர்தான் இளவரசர் மிரெட் அல் ஹுசேன் நேற்று சிறிலங்காவை வந்தடைந்தார்.
நான்கு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக கொழும்பு வந்த அவர், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக, நாளை முகமாலைக்குச் செல்லவுள்ளார்.
அத்துடன், வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளையும், கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்டவர்களையும் இளவரசர் மிரெட் அல் ஹுசேன் சந்திக்கவுள்ளார்.
கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் பிரகடனத்தில் சிறிலங்கா அரசாங்கம், 163 ஆவது நாடாக இணைந்து கொண்டுள்ளதை அடுத்து, இளவரசரின் இந்தப் பயணம் இடம்பெறுகிறது.
இளவரசர் மிரெட் அல் ஹுசேன், தற்போது ஐ.நா மனித உரிமை ஆணையாளராக பணியாற்றும் செய்ட் அல் ஹுசேனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.