சிறிலங்காவின் விசாரணை முடியும் வரை மேலதிக நடவடிக்கை இல்லை – பிரித்தானியா
பிரிகேடியர் பிரியங்க பெர்னோன்டோவுக்கு எதிரான விசாரணைகளை சிறிலங்கா அரசாங்கம் முடிக்கும் வரை, பிரித்தானியா மேலதிக நடவடிக்கைகளை எடுக்காது என்று கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்களை நோக்கி, கழுத்தை அறுத்து விடுவேன் என்பது போல, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, அச்சுறுத்தியிருந்தார்.
இந்தச் சம்பவம் குறித்த சர்ச்சைகளை அடுத்து, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ கடந்த மாதம் கொழும்புக்குத் திருப்பி அழைக்கப்பட்டார்.
எனினும், அவரது மனைவி, பிள்ளைகள் லண்டனில் தங்கியுள்ள நிலையில், அவர்களையும் திருப்பி அனுப்ப வேண்டும் என்று உலகத் தமிழர் பேரவை கோரியிருந்தது.
இதுகுறித்து கொழும்பில் உள்ள பிரித்தானியத் தூதரகத்திடம், கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியிருந்தது.
அதற்கு பிரித்தானிய தூதரகம் அனுப்பியுள்ள பதிலில், “லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு வெளியே நடந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுடன் சிறிலங்கா அரசாங்கம் தற்போது கலந்துரையாடல்களை நடத்தி வருகிறது.
சிறிலங்கா அரசாங்கம் இந்த விசாரணைகளை முடிக்கும் வரை, இதுபற்றி பிரித்தானியா கருத்து வெளியிடுவதோ, மேலதிக நடவடிக்கை எடுப்பதோ பொருத்தமானது அல்ல” என்று கூறப்பட்டுள்ளது.