ஜப்பானுக்கு அதிக முதலீட்டு வாய்ப்புகளை வழங்கத் தயார் – சிறிலங்கா அதிபர்
இன்னும் அதிகமான முதலீட்டு வாய்ப்புகளை ஜப்பானுக்கு வழங்க சிறிலங்கா தயாராக இருக்கிறது என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, ஜப்பானின் முன்னணி கைத்தொழில், வர்த்தக நிறுவனங்களின் 77 பிரதிநிதிகளைக் கொண்ட குழுவைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
1979ஆம் ஆண்டு ஜப்பானின் மிகப் பெரிய வர்த்தகக் குழு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட பின்னர், 39 ஆண்டுகள் கழித்து, ஜப்பானில் இருந்து மிகப் பெரிய வர்த்தகப் பிரதிநிதிகள் குழு சிறிலங்கா வந்துள்ளது.
இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கியுள்ள கலாநிதி அகியோ மிமுரா, சந்திப்பின் போது கருத்து வெளியிடுகையில், கைத்தொழில், உட்கட்டமைப்பு, உருக்கு, மென்பொருள், போக்குவரத்து, விமானசேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறிலங்காவில் முதலீட்டு வாய்ப்புகளை ஜப்பானிய அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான பல முன்மொழிவுகளையும் அவர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கியுள்ளார்.