சிங்கப்பூர் பிரதமருக்கு சிறிலங்காவில் வரவேற்பு
சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நேற்று மாலை சிறிலங்காவை வந்தடைந்தார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிங்கப்பூர் பிரதமரை, சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் வரவேற்றனர்.
சிங்கப்பூர் பிரதமருடன், பல்வேறு துறைசார் விற்பன்னர்களைக் கொண்ட குழுவொன்றும் சிறிலங்கா வந்துள்ளது.
இன்று காலை சிங்கப்பூர் பிரதமருக்கு சிறிலங்கா அதிபர் செயலகத்தில் அரசுமுறை வரவேற்பும், அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்படும்.
அதையடுத்து, சிறிலங்கா அதிபருக்கும் சிங்கப்பூர் பிரதமருக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன.