இயற்கைக் கடன் கழிக்கவே அமைச்சரவையை விட்டு வெளியேறினாராம் சிறிலங்கா அதிபர்
அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோபத்துடன் வெளியேறிச் செல்லவில்லை என்று சிறிலங்கா அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே, அமைச்சர் ராஜித இதனைத் தெரிவித்தார்.
“அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து சிறிலங்கா அதிபர் கோபத்துடன் வெளியேறவில்லை. அவர் இயற்கைக் கடன் கழிக்கவே அங்கிருந்து சென்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா அதிபரை விமர்சித்தமை தொடர்பாக, அமைச்சரவைக் கூட்டத்தில் சிறு குழப்பம் இருந்தது.
இதனால் சிறிலங்கா அதிபர் வேதனை அடைந்தார். அதனால் தான் அவர் சிறு கூற்றொன்றை முன்வைத்து அமைச்சரவையில் உரையாற்றினார்.
தேசிய அரசாங்கம் என்பது சிறிலங்கா அரசியலில் ஒரு புதிய விடயம். உலகில் ஜேர்மனி, ஒஸ்ரியா மற்றும் சிறிலங்காவில் மாத்திரமே தேசிய அரசாங்கங்கள் உள்ளன.
தேசிய அரசாங்கத்தைப் பற்றிய தெளிவான விளக்கம் எமது நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.