கோத்தாவின் அமெரிக்க குடியுரிமை – விசாரணை நடத்த சிறிலங்கா அரசு முடிவு
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்கக் குடியுரிமை கொண்டவரா இல்லையா என்பதைக் கண்டறிய விசாரணைகள் நடத்தப்படும் என்று சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணை போன்று, கோத்தாபய ராஜபக்ச தொடர்பாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறிலங்கா குடியுரிமை கொண்டவர்கள் மாத்திரமே, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, தெரிவு செய்யப்பட முடியும் என்றும், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த அதிபர் தேர்தலில் கூட்டு எதிரணியின் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்சவே போட்டியிடுவார் என்று, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்க நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.